All articles

சமரசத்தின் பாதையா? காத்திருப்பதின் பாதையா?

தேவனின் குரலுக்காக காத்திருக்காமல், மனித வழிகளைத் தேர்ந்தெடுக்கும்போது சமரசம் தொடங்குகிறது. ஆரோனின் பொற்கன்று சம்பவம், இன்றைய ஊழிய வாழ்க்கைக்கு ஒரு எச்சரிக்கை.

(இந்த கட்டுரை யாரையும் காயபடுத்தவோ, குற்றப்படுத்தவோ அல்ல , ஒரு விசுவாசியின் மனக்குரல்)

இன்று நாம் காணும் உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அது சமரசத்தின் உலகமாக மாறிவிட்டது என்பதுதான். தேவனுடைய மக்கள் கூட தேவனுடைய வார்த்தைக்காக காத்திருக்காமல், தங்களுடைய வழிகளைத் தேர்ந்தெடுத்து செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வந்த சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். மோசே மலையில் தேவனோடு பேசிக்கொண்டிருந்தபோது, மக்கள் ஆரோனிடம் வந்து, “எங்களுக்கு ஒரு தெய்வத்தை உருவாக்கித் தாருங்கள்” என்று கேட்டார்கள் (யாத்திராகமம் 32:1).

அந்த நேரத்தில் ஆரோன் இரண்டு பெரிய சவால்களை எதிர்கொண்டார்.

  1. மக்கள் அவரிடம் ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

  2. தேவனுடைய சித்தத்தையும் செய்தியையும் அறிந்து மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பது என்பதை அவர் அறியாமல் இருந்தார்.

அந்த சூழ்நிலையில் அவர் செய்ய வேண்டியது என்ன? மோசே திரும்பி வரும் வரை காத்திருத்தல். அல்லது தேவனிடமே அடையாளத்தைக் கேட்டு காத்திருத்தல்.

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

அவர் தனது பழைய அனுபவங்களை நோக்கித் திரும்பினார். எகிப்தில் பார்த்த வழிபாட்டு முறைகளை நினைவுகூர்ந்தார். மக்கள் கொண்டுவந்த பொன்னைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினார் (யாத்திராகமம் 32:4). “ஒருவேளை பொன்னை கொடுத்தால் தேவன் பதில் கொடுப்பார்” என்று எண்ணினார்.

ஆரோனின் பிரச்சனை விக்கிரகத்தை உருவாக்கியது மட்டும் அல்ல. தேவனுடைய குரலுக்காக காத்திருக்காமல், மனித அறிவால் வெற்றிடத்தை நிரப்ப முயன்றதே அவரது தவறு.

இன்று பல ஊழியங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது.

பலர் சபைகளை நடத்துகிறார்கள். ஊழியங்களை வழிநடத்துகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தேவனோடு இருந்த நெருக்கமான தொடர்பை இழந்து விடுகிறார்கள்.

அப்போது சிலருக்கு இரண்டு சவால்கள் உருவாகின்றன.

  1. தேவனிடமிருந்து பதிலை எவ்வாறு பெறுவது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

  2. மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கிறது.

அதன் விளைவாக, தேவனுடைய செய்தியைத் தேடுவதற்குப் பதிலாக, தங்களுடைய திறமைகள், அனுபவங்கள், உத்திகள் மற்றும் மனித தந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் இருக்கிறார் என்று மக்களுக்கு நிரூபிக்க முயல்கிறார்கள்.

ஜெப அறைக்கு செல்ல வேண்டிய இடத்தில், அவர்கள் வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் தேடுகிறார்கள்.

சிறிய சபையிலிருந்து பெரிய சபை, பெரிய கட்டிடம், பெரிய கூட்டம். பெரிய கூட்டத்திலிருந்து பெரிய புகழ்.

இப்படியே ஒரு முடிவில்லா ஏணி ஏறிக்கொண்டே செல்கிறார்கள்.

ஆனால் ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்படுவதில்லை:

“இது உண்மையில் இயேசு விரும்புகிற பாதையா?”

இன்று பல ஊழியங்களை இயக்குவது கிருபையின் காரணி அல்ல; வளர்ச்சியின் காரணி.

“Grace Factor” அல்ல, “Growth Factor”.

அடுத்ததாக என்ன? இன்னும் எவ்வாறு பெரிதாகலாம்? இன்னும் எவ்வாறு அதிக மக்களை ஈர்க்கலாம்?

இந்த மனநிலை உலகத்தில் வெற்றியைத் தரலாம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் அது சமரசத்திற்கான கதவைத் திறக்கும்.

இன்று நம்முடைய மனநிலை என்ன?

நம்முடைய மனசாட்சியை சோதித்துப் பார்ப்போம்.

தேவன் நம்மிடம் “இல்லை” என்று சொன்னால், நாம் நிறுத்தத் தயாரா?

தேவன் நம்மிடம் “காத்திரு” என்று சொன்னால், நாம் காத்திருக்கத் தயாரா? “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் புதுப் பெலன் அடைவார்கள்” (ஏசாயா 40:31).

தேவன் நம்மிடம்“போ” என்று சொன்னால், நாம் கீழ்ப்படியத் தயாரா?

உலகத்தின் பாராட்டைப் பெறுவதற்காக நாம் அழைக்கப்படவில்லை.

நம்முடைய வாழ்க்கையின் இறுதி நோக்கம், மனிதர்களின் அங்கீகாரம் அல்ல.

நம்மை உருவாக்கியவரும், மீட்டவரும், ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை ஆராதிபதே நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். “மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்களாயிருந்தால், நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனாயிருக்கமாட்டேன்” (கலாத்தியர் 1:10).

சமரசம் வேகமாக முன்னேற்றலாம்.

ஆனால் கீழ்ப்படிதல் மட்டுமே தேவனுடைய சித்தத்திற்குள் நடத்தும். “கேட்பதைவிட கீழ்ப்படிதலே சிறந்தது” (1 சாமுவேல் 15:22).

ஆகையால், ஓடுவதற்கு முன் கேட்போம். செய்வதற்கு முன் ஜெபிப்போம். முடிவெடுப்பதற்கு முன் காத்திருப்போம்.

ஏனெனில் “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.” (சங்கீதம் 127:1).

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களை readers@thetamilbible.in என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.|If you have any questions, you can contact us at readers@thetamilbible.in.

0 comments

Sign in to like and comment.

  • No comments yet. Be the first!

Related articles · தொடர்புடைய கட்டுரைகள்